Saturday, March 12, 2011

என் மன பதிவுகள் - 1990 - இருபது வருடங்களுக்கு முன்

எனக்குப் பிடித்தவை

என் மன பதிவுகள் - 1990
( இருபது வருடங்களுக்கு முன் )

1) வளைந்து நிற்கும் பனைமரம்
கீழே சலசலக்கும் சிற்றோடை
பள்ளிக்குப் போக வேண்டுமென்பதை
மறந்து பிறந்த மேனியாய்
பனை மரத்திலிருந்து நீருக்குள்
பாயும் அந்த, ...............
வாலற்ற வானரங்களின்
சந்தோஷக் கூச்சல்.

2) நிறைய பூ பூத்து
செக்கச் செவேலென்று
பரவசத்துடன் சிரிக்கும்
செம்பருத்தி செடியினை
சுற்றிச் சுற்றி வரும்
வண்டின் ரீங்காரம்.
ஓ, .... இது
ஓர் இனிய விடியல்.

3) முதியவரின் கண்களில் சூன்யம்
கடந்த காலத்தை
அசை போடும்
அடிமாடு.

4) புகை வண்டியின்
'' புவ்வாங் ''
சத்தம் கேட்டும்
மெல்ல நடந்து போகும்
எருமையின் அறியாமை

5) முட்டை தேய்த்து குளித்த பின்
முகமெல்லாம் சிவந்து போய்
உடலெங்கும் மாவு பூசி
களைத்து போய்
'' ஊம் '' என்ற பெரு மூச்சுடன்
உறங்கும் அழகான
அரை நிர்வாணக் குழந்தையை
மெல்ல முகர்நது பார்ப்பது.
ஹூம், ........ என்ன வாசம் !

6) தளிர் நடை போடும்
சின்னஞ்சிறு குழந்தையின்
கொலுசுச் சத்தத்தை
கண்களை மூடிக் கொண்டு
அனுபவித்துக் கேட்பது.

7) அப்பா அம்மா விளையாட்டு.
இல்லையில்லை ! நிஜத்தின் நிழல் !
'' அண்ணே ! சாப்பிடறீங்களா ''
சிறுமியின் கண்களில் கெஞ்சல்.
பெரிய மனதுடன் இரங்கி
'' என்ன தருவே? '' என்று நான்.
அவசரமாய் இலை பறித்து
அதில் மணல் சோறிட்டு
தழைகளை கொட்டி கூட்டிட்டு
செங்கல் நீறூற்றி குழம்பிட்டு
'' ம், ..... ம் ..... சீக்கிரம் சாப்பிடுங்க
நிறைய வேலையிருக்கு ''

அந்த சின்னஞ்சிறு
பெரிய மனுஷியின்
உலகையே தாங்கும் பாவனை.

8) யானையைப் பார்த்து
'' அப்பாடி ! எவ்வளவு பெரிசு ''
என்று கன்னத்தில் காற்றடைத்து
கண்களை அகல விரிக்கும்
குழந்தையின் பிரமிப்பு.

9) கண்களில் கனவுடன்
கன்னத்திலே கை வைத்து
அலுவலகத்திலிருந்து திரும்பும்
அப்பாவை எதிர் நோக்கி
பிறந்த நாள் அன்பளிப்பாய் வரப்போகும்
சிறிய கரடிக்குட்டி பொம்மையைப்
பற்றிய இனிய கனவுகளுடன்
சிறுமி, .... வாயிற்படியருகே !

10) காலையில் இட்ட முட்டை
கடையிலே அவியலான
கதை தெரியாமல்
அப்போதைய வயிற்றுப் பசிக்கு
புழுச் செல்வத்தைத்
தேடியெடுக்கும் அந்த
வாத்துக் கூட்டத்தின்
குவாக், ..... குவாக்.

11) அடம் பிடிக்கும் குழந்தைக்கு
கெஞ்சிக் கூத்தாடி
சோறூட்டும் அம்மாக்களை.

12) பொட்டு பொட்டாய் விழும்
மழைத்துளியில் மெல்ல நனைந்து
சிலிர்த்திருக்கும் மண் தேவதை.
மெல்ல விரிந்திருக்கும்
மணற் பரப்பு, ........

13) இடியோசைக்கு பயந்து
ஓ, ....... வென
அலறும் பெண்களை

14) எனக்காகவா இதை
வாங்கினீர்கள் என்று
மதி மயங்கி கேட்கும்
மென்மையான பெண்மையை !

15) என் கவிதைகளைப் படித்து
மெல்ல புன்னகைப்பவர்களை

16) யாருமற்ற தனிமை !
இயற்கைச் செல்வங்களுடன்
நான், ........ தனிமையில்.

மெல்ல தலையை உயர்த்தி
என் நட்சத்திரக் காதலியுடன்
மெளன மொழியில் பேசி
கடிதம் எழுதுவது.

17) சிறு வயதிலேயே
சிருங்கார பாவம் காட்டி
பரதமாடும்
சின்னஞ்சிறு தேவகி.

18) எதிராளியின் அறிவுக் கூர்மை

19) இயற்கையின் இனிய வசந்தம்

20) கட்டுப்பாடுகள் நிறைந்த போராளிகள் வாழ்க்கை

21) கடமைகளுக்காக உயிர்த் தியாகம்

22) பாரதியின் நெருப்பு வரிகளை

23) நன்மையோ, தீமையோ உள்ளதை சொல்பவர்களை

24) ஆள் அரவமற்ற ஊரில்
தன்னந்தனியே இறக்கி விட்டுவிட்டு
சற்று தூரத்தில் சப்தமேயில்லாமல்
போகும் பேருந்தினைக் காண்பது.
ஏனென்று தெரியாமலே
ஓர் இனம் புரியாத சந்தோஷம்.

No comments:

Post a Comment