Sunday, March 20, 2011

அன்னை தெரேசா


செப்டம்பர் 5, 1997. மறுநாள் எனது பிறந்த தினம் செப்டம்பர் 6.

மறுதினம் என்னென்ன செய்யலாம், யார் யாரைப் பார்க்கலாம் என்றெல்லாம் திட்டமிட்டுக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு இடி போன்ற கொடுஞ் செய்தி. அன்னை தெரேசா காலமானார். எல்லா திட்டங்களும் கைவிடப் பட்டன. அந்த பேரன்னையின் மறைவு என் நெஞ்சை மிகவும் வருத்தியது. எனது 29-ம் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு நிகழ்ந்த அக் துயரத்தினை என் மனம் ஓர் கவிதையாய் வடித்தது.

ஓவ்வோர் உயிரினமும் தனது சோகத்தை, தனது குரலில் பதிவு செய்யுமே ! அது போல எனது இக் கவிதை எனது ஆன்மாவின் குரலாய் உருவெடுத்தது.



இதோ, .... அது எல்லோருக்குமாக .............. 




அன்னை தெரேசா


இறைவன் படைத்த படைப்பிலேயே
எல்லையில்லாத கருணையை
அள்ளி வழங்கிய அருட்கொடை நீ !

உன்னிதயம் இந்த
பூமிப்பந்தை விட விசாலமானது.

நாடுகளைப் பிரிக்கும்
எல்லைக் கோடுகள் இல்லை
உன் உலகளாவிய மனதிற்கு.

மக்களை பிரிக்கும்
சாதியும், மதமும்
உன் கூப்பிய கரத்திற்கு
முன் மதியிழந்து செயல் மறக்கும்.
கருப்பு, வெள்ளை, .........
நிறங்களின் பேதம் உனக்கில்லை.

உனக்கென ஒரு நாடில்லை,
மதமில்லை, மொழியில்லை.
எல்லா நாடும் உன்னுடையது,
எல்லா மதமும் உன்னுடையது.
எல்லா மொழியும் உன்னுடையது.
எல்லா மக்களும் உன்னுடையர்.

உன் அரவணைப்பில் இருக்கும்
நோயுற்ற உயிரைப் பறிக்கும் முன்
அந்த இறைவன் கூட, ......
உன் எல்லையில்லா மானுடத்தின்
மகத்தான சக்தி கண்டு
ஒரு கணம்
மெய் சிலிர்த்துப் போவான்.

உனக்கென சொந்தமென
சொத்து ஒன்றுமில்லை
என்பார் சிலர்.
நீதான் இவ்வுலகின்
விலை மதிப்பில்லா சொத்து.
உனக்கென ஏன் தனி சொத்து ?

தன்னுடைய படைப்பில்
கடை மட்டப் படைப்பாய்
யாருமற்ற அனாதைகளை
இறைவன் படைத்து விட்டான்.
அவன் செய்த தவற்றினை
உன்னைப் படைத்து
கணக்குத் தீர்த்தான்.

எல்லா எளியோருக்காகவும்
நீ கண்ணீர் உதிர்த்தாய்.
உன் மறைவுக்கு இவ்
உலகமே கண்ணீர் வடித்தது.
எச்சிலைக் கூட
பிச்சையாய் பெற்றாய்.
இரந்தும் கூட
இல்லையெனாக் கொடுத்தாய்.

தொழுநோய் கண்டு
மெல்ல அழுகும் மனிதம் கூட
உன் அருகாமையால் மகிழ்ந்தது.
இவ் உலகம் ஒதுக்கினாலும்
உன் கரம் பட்டு சிலிர்த்தது.

கத்தியில்லை, இரத்தமில்லை - உன்
ஒரு புன்னகைக்கு முன்னால்
இவ்வுலகம் கை கட்டி நின்றதை
காலம் வேடிக்கை பார்த்தது.

உலக சரித்திரத்தில் உன்னளவு
மக்களை வசீகரித்த பெண்ணில்லை.
நீ உடுத்த வெண் புடவை
பூமிப் பந்து போர்த்திய
மானுட நேயத்தின்
தேசிய உடையானது.

இந் நூற்றாண்டில்
இறைவன் படைத்த
கருணையின் மொத்த வடிவான
கலைப் படைப்பு
நீதான்.

உன் பெயரை
யார் வேண்டுமானாலும்
சூடிக் கொள்ளட்டும் - ஆனால்
உன் " அருளன்னை " என்கிற
அடைமொழியை யாரும்
திருடிக் கொள்ள முடியாது.

அது, ...........
உனக்கென நீ
அறியாமல் சம்பாதித்த
ஒரே சொத்து.

உன் பெயர் இவ்வுலகில்
அன்பைத் தேடுவோர்
உள்ளவரை நிலைத்திருக்கும்.

புயலடித்தால் ....... அன்னை தெரேசா,
அடை மழை பெய்தால் ... அன்பு தெரேசா,
வெள்ளம் வந்தால் ... மதர் தெரேசா,
பஞ்சமென்றால் .... சகோதரி தெரேசா.

எத்தனை வடிவங்கள் உனக்கு !
இருந்தாலும் நீ மாறி விடவில்லை.
உன்னை இந்த
புகழும், பணமும்
எம்மிடமிருந்து
பிரிக்க முடியவில்லை
இறுதிவரை !

உன் கனிவான பார்வைக்கென
பல நாடுகள் காத்திருந்த போதும்
நீ எமெக்கென உன்னை அர்ப்பணித்தாய்.
எம் இதயம் நுழைந்து, உயிரில் கலந்தாய்.

உலக மக்கள்
உன் இழப்பிற்கு பிறகு
ஒட்டு மொத்தமாய் இறைவனிடம்
வேண்டும் வரம், ........
மீண்டும் நீ பிறக்க வேண்டும்.

உன்னை இயற்கை
எம்மிடமிருந்து பிரித்த போது
மலைத்து போனது !

எத்தனை மொழிகளில் அழுகை,
எத்தனை மொழிகளில் பிரார்த்தனைகள்,
எத்தனை கோடி விழிகளில் கண்ணீர்,
பூமி கிரகத்தை
சோக மேகம்
சூழ்ந்து கொண்டது.

அந்த சூரியன் கூட
கண்ணீர் வடியும்
விழிகளின் ஊடே
கலங்கலாய் தெரிந்தான்.

இதுநாள் வரை
உன்னால் உயிர்த்த
உயிர்கள் எல்லாம்
நாளை எண்ணி
கல்லாய் சமைந்தன.
ஆம் - நீ இறந்த
நாளை எண்ணி
கல்லாய் சமைந்தன.

இது போல்
இனியொரு படைப்பை
என்னால் மீண்டும்
படைக்க இயலுமா?
இறைவன் கூட
ஒரு கணம் திகைத்தான்.

எம் தாயே, ........

கொடிய ஆயுதங்கள்
எல்லாம் உள்ளோரை
மட்டுமே மிரட்டும்.

உலகமே உனதென்றாலும்
உனக்கென ஏதுமில்லை.

அணு ஆயுதங்கள் கூட
உன்னிடத்தில் மண்டியிட்டு
வணங்கி நிற்கும்.

வாழி நீ பல்லாண்டு !

No comments:

Post a Comment