பத்தாண்டுகளுக்கு முன், .......
எனக்கு திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் திகைப்பாயிருந்தது. அந்நிகழ்வு என்னில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவருமோ? நான் நானாக இல்லாமல் முழுவதுமாய் மாறிப் போய்விடுவேனோ என்கிற அச்சம் என்னுள் துளிர்த்தது. அதன் விளைவே இக் கவிதை.
யாரென்று முகம் தெரியா அப் பெண்ணிடம் எனக்கு ஏற்பட்ட அச்சம் இன்று வரை மாறாத ஒன்று என்ற வகையில், இன்றளவும் எனக்குப் மிகவும் பிடித்த எனது கவிதைகளில் இதுவும் ஒன்று.
இதோ உங்களுக்காக, ..........
அணிவதெதை?
இத்தனை அமளியும் !
என்னென்ன நடக்குமென
என் உள்ளில் சதா உருளும்
கர கர தகரக் குவளை.
அச்சம் எனை வாட்டுகிறதே
அருமைத் தோழீ.
ஏனோ தெரியவில்லை என்னில்
மணம் என்றவுடன்
குழப்ப மேகங்கள்.
என்னென்ன செய்திடுவாயோ
என்னில் நீ !
என்ற பயம் எனக்குள்.
உன் வரவால்
என்னென்ன உருமாறுமோ ?
பிறர் தூங்கும் நள்ளிரவில்
பேயென விழித்திருந்து
இலக்கியம் படிக்கும்
என்னுள் குடியிருக்கும்
கலகக்கார இலக்கியவாதி
உன் திடீர் வரவைக் கண்டு
நிலைகுலைந்து போவானே !
சத்தமின்றி அவனை நீ - சாக
விட்டுவிட்டால் என்னாவேன் நான் ?
உருண்டு திரண்ட தோளினைத் தட்டி
உருட்டு பிரம்பு காற்றில் சீற
பம்பரமாய் கம்பு சுற்றி
படை மிரட்டி விளையாடும்
முரட்டு இளைஞன் -
நாளை முதல் நான்
தழைய வேட்டி கட்டி, தாடி சிரைத்து,
தணிவாய் நடந்து, கனிவாய் பேசினால்
எங்கே போய் குடியிருப்பான் என்னிலிருந்து ?
எளியவர் மிதிக்கப் பெற்றால்
எங்கிருந்தாலும் சங்கென முழங்கி
சமுதாயத்திற்கே சவால் விடுக்கும்
என்னுள் குடியிருக்கும்
கோபக்கார வாலிபன் உனைக் கண்டு - தன்
கோர முகம் எதில் மறைப்பான்?
சூரியன் கிழக்கிலா? மேற்கிலா?
இது இரவா? பகலா?
நீவிர் நண்பரா? பகைவரா?
நாவலா? கவிதையா?
தழுவலா? இயற்றலா?
புன்னகையா? கோபமா?
விருந்தா? பசியா?
புகழா? இகழா?
எல்லாமே வாழ்வென மகிழ்ச்சியாய்
வாழ்ந்து வந்த அந்த தத்துவ ஞானி
உன் கண் பார்வையில் படாமல்
தன் பிச்சை பாத்திரத்தை
எங்கே ஒளித்து வைப்பான்?
கலைந்த புத்தக மூட்டைகளிடையே
உறங்கிப் பழகிய பள்ளிச் சிறுவன்
கனவுலகிலிருந்து திடுக்கென
பிடுங்கிப் போடப்பட்டு
குலைந்த தூக்கத்துடன்
மிரள எழுந்தமர்ந்து
அழகாய் நீ அடுக்கி வைத்த
புத்தக அலமாரியையும்
அருகினில் பளிச்சென்றிருக்கும்
வெற்றுத் தரையையும்
திரும்பித் திரும்பிப் பார்த்து
வார்த்தைகளற்று ஏதோ இழந்ததாய்
உறக்கம் விழித்தும் பிதற்றும்
என்னினிய அப் புத்தகப் பிரியனை
இனி எங்கே போய் தேடுவது?
விடிந்து வெகு நேரமாகி
மதியம் நெருங்குகையில்
மெல்லக் கண் விழிக்கும்
பின்னிரவு சிந்தனாவாதியின்
உள்ளே உறங்கும் யதார்த்தவாதி
உன் அதிகாலை பூபாளத்தை
எந்தக் காதால் கேட்டு இரசிப்பான்?
செய்தித் தாளில் கண்விழித்து
சோம்பலுடன் தேநீர் பருகி
மெல்லத் திரும்பி கடிகாரம் நோக்கி
மணி ஒன்றா? இது மதியமா?
செல்லக் கேள்வி தனக்குள் கேட்கும்
புத்திளம் கனவுலகை படைக்க நினைந்து
தினந்தோறும் நினைவுகளுடன் போராடி
விடிய உறக்கம் கொள்ளும்
தத்துவார்த்த முது மனிதன்
இரவு மெல்லப் பிரியும் அதிகாலையில்
பளீரிடும் உன் மஞ்சள் முகம்
கண்டு வியப்பது எப் பொழுது?
நாளைய நினைவேட்டு பக்கத்துடன்
இன்றைய நனவேட்டில் எழுதத் தெரியா
முப்பதைக் கடந்த முக்கால் முதியவன்
முழுவதையும் கடக்க
இருபதைத் துணைக்கனுப்பும்
விசித்திர மனிதர்காள் !
சற்றே விளக்குவீர்.
என் பல்வேறு முகமூடிகளில்
நான் இனி அவளுக்கென
சாஸ்வதமாய் அணிவதெதை?
No comments:
Post a Comment