மறக்கவியலா ஸ்பரிசம்
எனக்கு வகுப்புகள் இல்லாத நேரங்களில் மற்ற வகுப்பறைகளைக் கடந்து, சிற்றுண்டி சாலையை நோக்கி நண்பர்களுடன் கூட்டமாய் பேசிக் கொண்டே போகும் போது, இடையிலே எந்த வகுப்பிலாவது பேராசிரியர் திரு. டி. தியாகராசனார் தமிழ் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் என்றால், நான் உடனே அந்த வகுப்பறையின் வாயிலிலே அழையா விருந்தாளியாக போய் நிற்பேன். நீதிமன்றங்களிலே சற்றே தலை சாய்த்து உள்ளே நுழையும் வழக்கறிஞர்கள் போல நானும் சற்றே தலையை சாய்த்து அனுமதி வேண்டி, அனுமதிக்கும் முன்னே மிடுக்காய் உள்ளே நுழைந்து, கடைசி இருக்கையிலே அமர்ந்து விடுவேன். அடுத்த சில மணித்துளிகள் தமிழமுது பருகுவதில் மகிழ்ச்சியாய் கரையும்.
அந்த வருடம் பேராசிரியர்களிடையே ஏதோ சிறிய பிரச்சனை வந்து, அது மிகவும் முற்றி, சிலர் கை கலக்கும் வரை சென்றுவிட்டது. மாணவர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். அப்போது பேராசிரியர் திரு. டி. தியாகராசனார் அவர்கள் மிகுந்த மனக் கலக்கத்துடன் இருந்தார். அவரிடம் பேசும் போது '' வேலையை விட்டுவிடலாம் என்று கூட நினைத்துவிட்டேன் தம்பி '' என்றார். அது என்னை மிகவும் பாதித்து விட்டது.
அன்று அவருக்காக ஒரு கவிதை எழுதினேன். அப்போது எனக்கு வயது 18-ம் சில மாதங்களும். என்றாலும் கூட இன்றளவும் அக்கவிதையைப் படிக்கும் போது நான் அன்று இருந்த அந்த உணர்ச்சிப் பெருக்கை என்னால் உணர முடிகிறது.
அக்கவிதையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி,
இதோ, ......... இளம் கவியின் கவிதை, ..........
இறைவன், ...........
பட்டாம்பூச்சியின் வாலில்
நூல் கட்டி விளையாடும்
மூடன் !
உலகம் உருண்டை.
அது போல் நம் வாழ்க்கை.
ஆரம்பமும் முடிவுமின்றி !
புறப்பட்டால் அது
போய்க் கொண்டேயிருக்கின்றது
வட்டத்தைப் போல !
மனித குலம் என்ற பெயரில்
அரக்கர்களிங்கு ஏராளம்.
நீ மனிதனாயிரு - ஆனால்
மற்றவர்களை எதிர்பார்க்காதே !
நீ, ................
துளிர் விடுகையில்
கிள்ளப்படுவாய் !
அதனால் தளராதே - ஓர்
புதிய உத்வேகத்துடன்
கிளைத்து வளர்.
ஆல் போல் வேர் விடு.
கிளைகளை படர விடு.
அடியில் வளரும்
அற்பப் புற்களை
அலட்சியம் செய் - உன்
கம்பீர நீழலால் அவை
பூண்டற்று போய் விடும்.
உன்னிடமிருக்கும் குறைகளை
இலைகளென உதிர்த்து விடு.
அவை உரமாகி உனக்கு
ஊட்டமூட்டட்டும்.
உன் அறிவை, திறமையை
வளர்த்துக் கொள்ள
தேடுதல் வேட்டையைத் தொடங்கு.
விழுதுகளை மண்ணிற்குள்
புதைத்து உயிர் சத்தைத்
தேடு ! சேகரித்து வை !!
விழுதுகள் உனக்கு குழந்தைகள் !
உடல் தளர்கையில் அவை
ஆன்மாவை பலமாக்கும்.
களைப்பு - மனித இயற்கை !
உடலுக்கு ஓய்வு தேவை.
மனதிற்கு ஏது ஓய்வு ?
மனம் ஓய்வெடுத்தால் - உன்
மனிதப் பிறவிக்கு அர்த்தமில்லை.
நீ ஆதவன் - எம் உலகை
உய்விக்க வந்தவன்.
உனக்கு அழிவில்லை !
ஆசிரியனுக்கேது அழிவு ?
காலங்காலமாய், குரு பரம்பரையாய்
நிலைக்கும் உன் அமரத்துவம் !
அறிவுப் பிரபஞ்சத்தின்
தற்கால சூரியன் - நீ !
இருண்ட துருவங்களை மறந்து விடு.
உன்னொளியால் காயும்
கடலைப் பார் - அதனால்
கருக் கொள்ளும் கார்முகிலைப் பார்.
உழவனின் முகத்தைப் பார் - ஏழ்மையில்
உழலும் அக்குடியானவன்
உன்னால் பெறும் உற்சாகத்தைப் பார்.
மலைகளில் உன்னால்
உருவான ஆற்றைப் பார் - அதில்
உருளும் தோணிகளைப் பார் - நீரினில்
மீனினத்தைப் பார் - அதுவே வெட்க
மீன்விழியுடைய பெண்களைப் பார்.
மிக்க பொலிவுடன் அவர்கள்
மீதிலமர்ந்து சிரிக்கும் அக்
குழவிகளைப் பார் - மகிழ்ச்சியடை !
இதோ, -
ஓர் இளைய பாரதம் உன்
மோன வேள்வியில்
ஞானம் பெற வருகிறது.
அன்புடன்
டி. ஜனார்த்தனன்
இதைப் படித்த அவர், மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில், " நல்லா .... நல்லா ... " என்று கூறி, என் இரு கரங்களையும் வலுவாகப் பற்றி, ஆசை தீர குலுக்கியது - என்னால் மறக்கவியலா ஸ்பரிசங்களில் ஒன்று.
No comments:
Post a Comment