Monday, March 21, 2011

அசோகன்

கலிங்கத்துப் போருக்குப் பின் சாம்ராட் அசோகன் மகா அசோகனாக மாறிய கதையை சிறு வயதில் பள்ளியில் நாடகமாய் பார்த்தேன். அப்போது எட்டு வயது சிறுவனாய் இருந்த என்னை அந்த அசோகன் மிகவும் கவர்ந்து விட்டான். பிறகு 10 வயதில் அவனைப் பற்றிய கதைகளைப் படித்த எனக்கு, வெகு ஆண்டுகள் அதன் பாதிப்பு இருந்தது. அதையொட்டிய ஏராளமான கேள்விகள் என் மனதில்.

மாபெரும் தேசத்தை வென்றெடுக்க, இலட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுக்கவும் தயங்காத, அந்த கோர அசோகன் போருக்குப் பின் பெளத்த அசோகனாய் மாறி, விலங்குகளுக்குக் கூட ஆதுர சாலைகளை அமைக்கும் அளவிற்கு கருணை உள்ளத்தினனாய் மாறிய இரசவாதம் எங்கனம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்கிற சிந்தனை என்னுள் இருந்து கொண்டேயிருந்தது.

அப்போது எனக்கு வயது இருபது. ஒரு நாளிரவு, சிறுவயதில் எங்கெங்கோ படித்த கதைகளின் பாதிப்பினால் உறக்கமின்றி புரண்டுகொண்டிருந்த என் கனவில், என்னைக் காண மகா அசோகரே நேரில் வந்தார்.

அவர் தனது கருணை மிகுந்த குரலில், என்னிடம் விவரித்த பல சம்பவங்களில், என் உள்ளத்தை கொள்ளை கொண்ட நிகழ்ச்சியை மறு நாள் காலையில் ஒரு சிறு புதுக் கவிதையாக்கினேன். 



அது இப்போது அனைவருக்கும், ..........



கலிங்கத்துப் போர் !
அசோகனுக்கு மண்ணாசை !
அகிலமெல்லாம் ஆள வேட்கை !
போர் ! போர் ! போர் !
கொலை ! கொலை ! கொலை !
அமைதி ! அமைதி ! நிசப்தம் !
இரவினில் களம் புகுந்து - தன்
சாகசத்தின் ஆழம் காண நடைபோடும்
அசோக மன்னன்.

சக்கரவர்த்தியின் - இதய
சிம்மாசனத்தையே
அசைத்து விட்ட
சரித்திரப் படுகொலை !

மன்னன் முனிவனான் !
விடுமா உலகம் ?

அமைச்சனை அழைத்தான் அரசன்.
விலக்கிடு போரை !
கலைத்திடு படையை !
பெருக்கிடு அன்பை !
பரப்பிடு பெளத்தத்தை !
விதைத்திடு சமாதானத்தை !
என்றான்

மந்திரி மதியூகி !
மன்னன் மனநிலையில்
மாற்றம் வேண்டுமென
உடனே கேட்காமல்,
இரு தினம் கேட்டான் அவகாசம்.

இரவு நகர்வலம் !
மன்னனும், மந்திரியும்.
அமாவாசை இரவு.
தொட்டு, கரிய பொட்டு
வைத்துக் கொள்ளும்
கும்மிருட்டு.

எதிரே ஒருவன் !
பிரகாசமான விளக்குடன் !
அமைச்சனும், மன்னனும்
அருகினில் சென்றனர்.
தன் வழியே போகாமல்,
தானே எதிரே வந்து
மோதினான் மன்னன் மேல்.

பொங்கி எழுந்தான் மன்னன்.
இவ்வளவு வெளிச்சத்தில்
ஏன் என் மீது மோதினாய்?
உனக்கென்ன கண் குருடா ?
எனக் கேட்ட மன்னனுக்கு
அமைதியாய் சொன்னான்
அந்த அந்தக மனிதன்
"ஆம்''
அதிர்ந்தான் மன்னவன்.
ஆச்சரியமாய் கேட்டான்
பிறகேன் உனக்கு விளக்கு ?
அதுவும் பிரகாசமாய்.

பதிலிருத்தான் குருடன்.
இருட்டு எனக்கு தாய் வீடு.
இவ்வுலகமே எனக்கு
காலடிகளின் கணக்கில்தான்.

உன்னைப் போன்ற ஒளிவிழி மக்கள்
என் மீது வந்து மோதி - என்னை
மண்ணில் தள்ளி விட்டால்
காலடி மீது கவனம் சிதறிப் போகும்
வேதனைதான் மிஞ்சும்
வீடு போகும் வரை
என்றனன்.

மன்னன் மதியூகி மந்திரியை
தீர்க்கமாய் பார்த்து சொன்னான்.
படை பலத்தை நிலைக்க செய் !
பயிற்சி கொடு ! எதிரியைத் தடு !
விளைச்சலை காத்து நில் !
ஆநிரையை மேய்த்து நில் !
மகளிரைப் போற்றி நில் !
அன்பைப் பற்றிக் கொள் !
ஆதரவைத் திரட்டிக் கொள் !
அமைதியாய் வாழக் கற்றுக் கொள் !
இது அரச கட்டளை !
என்றுரைத்தான்.

மதியூகி மந்திரி
மெளனமாய் சிரித்தனன்.
என் திட்டம் பலித்தது.
இவன் இனி
மன்னனுமில்லை
முனிவனுமில்லை
'' ராஜரிஷி ''

No comments:

Post a Comment